நிலம்ஆளும் மனிதரே! நிலமாளு முன்எனது
நேரான சொற்கள் கேட்பீர்!
நீர்மொள் ளவும்,தீ வளர்க்கவும் காற்றுதனை
நெடுவௌியை அடைவ தற்கும்
பலருக்கும் உரிமைஏன்? பறிபோக லாகுமோ
பணக்காரர் நன்மை யெல்லாம்?
பறித்திட்ட நிலம்ஒன்று! பாக்கியோ நான்குண்டு!
பறித்துத் தொலைத்து விட்டால்
நலமுண்டு! பணக்காரர் வயிறுண்டு! தொழிலாளர்
நஞ்சுண்டு சாகட் டுமே!
நற்காற்று, வானம்,நீர், அனல்பொது வடைந்ததால்
நன்செயும் பொதுவே எனத்
தலையற்ற முண்டங்கள் சொன்னாற் பெரும்பெரும்
தலையெலாம் உம்மில் உண்டு!
தாழ்ந்தவர்க் கேதுண்டு; காற்செருப் பேஉண்டு
தகைகொண்ட அன்னை நிலமே!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt256