தன்னினம் மாய்க்கும் தறுதலை யாட்சி
சற்றும் நிலைக்காது! மாளும்!
தன்னினம் மாய்க்கும்...

இந்நிலம் திராவிடர் ஆண்டார்
இறந்தநாள் வரலாறு காண்க.
தன்னினம் மாய்க்கும்...

மன்னும் இமயத்தில் தன்வெற்றி நாட்டிய
மன்னவன் திராவிட மன்னன் - எதிர்
வந்திட்ட ஆரிய ரைப்புறம் கண்டதோள்
திராவிட மன்னவன் தோளே!
சின்ன நினைப்புகள் தன்மான மற்ற
செயல்களை இனிவிட்டு வையோம்.
தன்னினம் மாய்க்கும்...

திராவிடப் பெருங்குடியில் வந்தவன் திராவிடத்
திருநாடு பெற்ற சேய்தான் - இத்
திராவிடர்க் கின்னல் செய்துதன் நன்மை
தேடினான் எனிலவன் நாய்தான்!
எரிகின்ற எங்களின் நெஞ்சமேல் ஆணை
இனிஎங்கள் ஆட்சிஇந் நாட்டில்.
தன்னினம் மாய்க்கும்...

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt236