விரிந்த வானே, வௌியே - எங்கும்
விளைந்த பொருளின் முதலே!
திரிந்த காற்றும், புனலும் - மண்ணும்
செந்தீ யாவும் தந்தோய்.
தெரிந்த கதிரும் நிலவும் - பலவாச்
செறிந்த உலகின் வித்தே!
புரிந்த உன்றன் செயல்கள் - எல்லாம்
புதுமை! புதுமை! புதுமை!

அசைவைச் செய்தாய் ஆங்கே - ஒலியாம்
அலையைச்செய்தாய் நீயே!
நசையால் காணும் வண்ணம் - நிலமே
நான்காய் விரியச் செய்தாய்!
பசையாம் பொருள்கள் செய்தாய் - இயலாம்
பைந்தமிழ் பேசச் செய்தாய்!
இசையாம் தமிழைத் தந்தாய் - பறவை,
ஏந்திழை இனிமைக் குரலால்!

எல்லாம் அசையச் செய்தாய் - உயிர்கள்
எதினும் அசைவைச் சேர்த்தாய்.
சொல்லால் இசையால் இன்பம் - எமையே
துய்க்கச் செய்தாய் அடடா!
கல்லா மயில், வான்கோழி - புறவுகள்
காட்டும் சுவைசேர் அசைவால்
அல்லல் விலக்கும் `ஆடற் - கலை'தான்
அமையச் செய்தாய் வாழி!

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.5. அதிகாலை

அமைதியில் ஒளி அரும்பும் அதிகாலை - மிக
அழகான இருட்சோலை தனில்
அமைதியில் ஒளி...

இமை திறந்தே தலைவி கேட்டாள் - சேவல்
எழுந்திருப்பீர் என்று கூவல்
அமைதியில் ஒளி...

தமிழ்த்தேன் எழுந்தது வீட்டினர் மொழியெலாம்
தண்ணீர் இறைந்தது தலைவாயில் வழியெலாம்
அமைத்த கோலம் இனித்தது விழியெலாம் - நீ
ராடி உடுத்தனர் அழகுபொற் கிழியெலாம்
அமைதியில் ஒளி...

பெற்றவர் கூடத்தில் மனைமேற் பொருந்தித் - தம்
பிள்ளைக ளோடு சிற்றுண வருந்தி
உற்ற வேலையில் கைகள் வருந்தி
உழைக்க லாயினர் அன்பு திருந்தி
அமைதியில் ஒளி...

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt205