பொறுமைதான் உன்றன் உடைமை! அதைப்
போற்றலே கடமை

பொறுமையாற் கழியும் நாளிலே
புதுவன்மை சேருமுன் தோளிலே!
பொறுமைதான் உன்றன் உடைமை!

பொறுமையுடைய ஏழையே கொடையன்!
பொறுமையிலாதவன் கடையன்!
இறைவனே எனினும் பிழை செய்தோன்
ஏதுமற்றவனாகி நைவான்!
பொறுமைதான் உன்றன் உடைமை!

பலமுறை பொறுப்பாய் வேறு
பழுதும் நேருமெனில் சீறு!
நிலைமை மிஞ்சுகையில் பகைவனை
நீறாக்கலே பொறுமையின் பயன்
பொறுமைதான் உன்றன் உடைமை!

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093.htm#dt121