ஓவியம் வரைந்தான் -- அவன் தன்
உளத்தினை வரைந்தான்!
ஒல்லிஇடை எழில் முல்லை நகை இரு
வில்லைநிகர் நுதல் செல்வியை வைத்தே
ஓவியம் வரைந்தான்!

கூவும் குயில்தனைக் கூவா திருத்திக்
கூந்தல் சரிந்ததென் றேந்தித் திருத்தி
மாவின் வடுப்போன்ற கண்ணை வருத்தி
வஞ்சியின் நெஞ்சத்தைத் தன்பாற் பொருத்தித்
தேவை எழுதுகோல் வண்ணம் நனைத்தே
தீர்ந்தது தீர்ந்தது சாய்ந்திடேல் என்றே
ஓவியம் வரைந்தான்!

காதலைக் கண்ணிலே வை! என்று சொல்வான்
கணவ னாகஎன்னை எண்ணென்று சொல்வான்
ஈதல்ல இவ்வாறு நில்லென்று சொல்வான்
இதழினில் மின்னலை ஏற்றென்று சொல்வான்
கோதை அடியில்தன்கை கூப்புதல் போலவும்
கொள்கை மகிழ்ந்தவள் காப்பது போலவும்
ஓவியம் வரைந்தான்!

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093.htm#dt115