இருவர் இணக்கத்தை அடைவதற்கான ஜனநாயக மனப்பாங்கின்றிய இணக்கமற்ற முரண்பாடுகள் என்பது, இன்று பல குடும்பங்களில் அடிப்படையான பிரச்சனையாகி உள்ளது. இணக்கத்தையொட்டி வாழ்வியல் மொழியைக் கூட சமூகம் இழந்து நிற்கின்றது.

 பல குடும்பங்களில் வௌவேறு விதமான இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வாழ்க்கை முறைகள், குடும்பத்தினுள்ளேயே நடைமுறைக்கு வந்துவிடுகின்றது. மனைவி ஒருபுறம் கணவன் மறுபுறம் என்றால் குழந்தைகள் வேறுபுறம்.

 

இந்த முரணிலையில் பொதுவாகவே (புலம்பெயர்) ஆண்கள் குடிப்பவர்களாக இருக்கின்ற பொதுவான நிலை காணப்பட்டது, காணப்படுகின்றது. இதைக் கையாளும் விதம் ஆண் பெண் முரண்பாட்டில் பாரிய எதிர்நிலைத்தன்மை கொண்ட ஒன்றாகவே மாறி நிற்கின்றது. இப்படித்தான் அநேக பிரச்சனைகள்.

 

(புலம்பெயர்) சமூகத்தில் குடிக்கும் கணவனை, மனைவி கையாண்ட விதம் எப்படிப்பட்டது? உண்மையில் இதைக் கையாண்ட விதமே, அநேகமான வீடுகளில் நடக்கும் சண்டைக்கான முதல் காரணமாக அமைந்துவிடுகின்றது. இதன் விளைவு பலர் மிக மோசமான குடிகாரராக சீரழிந்தனர். பலர் வீதி வாழ்க்கைக்கு வந்து விடுகின்றனர். (புலம்பெயர்) சமூகத்தில் இது ஒரு பாரிய சமூக பிரச்சனையும் கூட. ஆனால் இதைப் பற்றி சமூகம் அக்கறை கொள்வதில்லை. சமூகமே அக்கறைப்படாத இந்த நிலையில், ஒவ்வொரு மனைவியும் தனக்கு தெரிந்த குறுகிய வழிகளில் அதை எதிர் கொள்கின்றாள். பெரும்பாலான மனைவிமாருக்கு தெரிந்த ஒரே வழி, இதற்கு எதிரான மொழி வன்முறையே. அதாவது நச்சரிப்பும், திட்டுதலும், சண்டை பிடித்தலுமாகும். இதன் விளைவு மேலும் எதுக்கும் உதவாத குடிகாரனாக அல்லது எதுக்கும் லாயக்கற்று மனைவிக்கு பயந்து நடுங்கும் ஒரு கோழையாக மாறிவிடுவது நிகழ்கின்றது.

 

இதுவே பல குடும்பங்களில் நடந்தது, நடக்கின்றது. கணவன் குடிக்கின்ற சூழல், அதை உருவாக்கிய சந்தர்ப்பம் பற்றி, அப் பெண் தெரிந்து கொள்ளும் அளவுக்கு அவளுக்கு சமூக அறிவு கிடையாது. ஏன் அவளுக்கு மட்டுமல்ல , சமூகத்துக்கே அந்த அறிவு கிடையாது என்பதே உண்மை. மறுபக்கம் இதையே தனது வாழ்வாக ஏற்றுக்கொண்டு எதிர்கொள்ளும் பெண்ணின் வாழ்க்கையோ குட்டிச்சுவராகி விடுகின்றது. பெண் இதைக் கையாண்ட விதம், இதை தீர்ப்பதற்கு பதில் எதிர்மனப்பான்மையில் இதை ஊக்குவித்தது. ஆணை மேலும் மோசமான குடிகாரனாக விரட்டுகின்ற வழியில், ஒரு மொழி வன்முறையைத் தான் பெண் கையாண்டாள், கையாளுகின்றாள்.

 

சமூகத்தின் எந்த அரசியல் சமூக உறுப்பும் இதை மாற்றியமைக்கவும், வழிகாட்டவும் முன்முயற்சியை எடுக்கவில்லை. உண்மையில் அதற்கு அதனிடம் அதைப்பற்றி தெளிவு கிடையாது. இதை மாற்றும் சிறுபான்மையினரின் சிறிய முயற்சிக்கான சமூகக் கூறுகள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டு கிடந்தது.

 

பெரும்பாலான கணவன்கள் திருமணத்துக்கு முன்பாகவே குடிக்கின்ற இந்த வியாதி என்பது, அவன் வாழ்க்கை சார்ந்த சூழலால் ஏற்பட்டது. குறுகிய வாழ்விலும் மேலும் தனிமைப்பட்டு அன்னியமானதும், வாழ்வில் சுமக்க முடியாத சுமையை சுமந்தும், வாழ்க்கையை சுற்றிய சோகங்களுமே ஆணின் வாழ்க்கையாக அமைந்தது. ஆண் இதில் இருந்து தப்ப, தனக்குத் தெரிந்த குறுக்கு வழி என்பது, சமூகத்தை மறந்து வாழ்தல் என்பதே. இந்தத் தேர்வு என்பது நிஜ வாழ்வைக் கண்டு அஞ்சும் ஆணின் கோழைத்தனம் (பொதுவாக உலகளவில் பெண்ணைவிட ஆணின் அச்சம் அதிகமானது. இதனால் தான் தற்கொலை செய்வது பெண்ணை விட ஆண் அதிகம்.) தான், ஆண்களை குடிக்குள் வாழ்வதை உந்தித்தள்ளுகின்றது. நிஜமான உலகில், நிஜ வாழ்வில் வாழ அஞ்சுகின்ற ஆணின் (கணவனின்) மனநிலை தான், அவன் விரும்பி நாடும் போதைக்கு காரணமாக அமைகின்றது. இதற்கு நண்பர்கள் வட்டம், மற்றும் கேளிக்கைகள், சந்தர்ப்ப சூழல்கள் தற்செயலான தூண்டுதலாகவே அமைகின்றது.

 

கணவன் குடித்துவிட்டு ஒரு குடிகாரனாக வீட்டுக்கு வருகின்றான் என்றால், அவனின் சுயவறிவற்ற நிலைக்கு பெண் (மனைவி) பரிதாபப்பட வேண்டும். வாழ்வை எதிர்கொள்வதில் உள்ள அவனின் கோழைத்தனத்தை இனம் காணவேண்டும். தன்னை மறந்து வாழ பழக்கமாகிவிட்ட ஒரு நிகழ்ச்சியை, எப்படி அகற்றுவது என்பதை தேர்ந்த ஒரு விடையமாக சவாலாக எடுத்துக் காணவேண்டும். உண்மையில் பெண் செய்ய வேண்டியது யாதெனின், அவனின் நிஜவுலகில் அவனின் மகிழ்ச்சிக்குரிய சூழலை தன்னுடன் இணைத்து உருவாக்குவது தான். இது பெண்களுக்கு தெரியாது இருப்பதே மற்றொரு விடையம். தனது மகிழ்ச்சி என்பது, தான் மகிழ்ச்சியாக நடந்து கொள்வதில் இருந்து உருவாகின்றது.

 

இதைப் பெண்கள் உணருவதில்லை. மாறாக தனது வாழ்க்கையின் மகிழ்ச்சியை எதிர்நிலையில் அணுகி இழக்கின்றாள். பின் தனது வாழ்க்கையை சொந்த தலைவிதி என்கின்றாள். இது பற்பல குடும்ப மற்றும் பாலியல் பிரச்னைகளையும் உருவாக்குகின்றது.

 

பிரச்சனைகளை தீர்ப்பது என்பது, சண்டை பிடிப்பதோ, நச்சரிப்பதினாலோ, மொழி வன்முறை மூலமோ தீர்க்க முடியாது. ஆனால் எமது பெண்கள் அப்படித்தான் செய்கின்றனர். கணவனுடன் மட்டுமன்றி குழந்தைகளுடன் கூட அப்படித்தான் பெண்கள் கையாளுகின்றனர். இதன் விளைவு, பரஸ்பரம் மேலும் மேலும் அன்னியமாகி விடுவது நிகழ்கின்றது. குடிப்பவர்கள் மேலும் அதிகமாகவே குடிப்பதை நோக்கி இது தள்ளிச் செல்லுகின்றது. வீட்டில் அமைதியான, மகிழ்ச்சியான, அன்பான சூழல் என்பது அருகிப்போகின்றது. பொதுவாக எந்த விடையத்திலும் இது பொருந்தும். நெருங்கியவர்களை விட, மற்றவர்களே தம் மீது அன்பு செலுத்துவதாக காண்பது அதிகரிக்கின்றது. பல தவறுகளுக்கு இது அடிப்படைக் காரணமாகிவிடுகின்றது. இவை அன்றாட வாழ்வில் பழக்கப்பட்டு, ஏன் அவை செரிக்கப்பட்ட விடையங்களாகி விடுகின்றது. மேலும் பரஸ்பரம் அலட்சியப்படுதலுக்கும் புறக்கணிப்புக்கும் உள்ளாகிவிடுகின்றது.

 

சதா நச்சரிப்பதும், சண்டை பிடிப்பதும், பிழை பிடிப்பதும் என்பதே குடும்பமாகி, குடும்பமே வன்முறையாகி விடுகின்றது. இதன் எதிர்வினையோ வன்முறை வழியில் அல்லது கோழையைப் போல் சுருண்டு விழத் தூண்டுவதாகும். வன்முறை அல்லது எதற்கும் லாயக்கற்ற கோழையாக அல்லது இரகசிய பேர்வழியாக தனது இயல்பை இழந்து மாறிவிடுகின்றனர். கண் பார்வைக்குள் பரஸ்பரம் அடங்கிப் போகின்ற கோழைத்தனமான குடும்ப இணக்கங்களும், அதன் மேலான அதிகாரங்களுமே வாழ்க்கையாகி விடுகின்றது.

 

இணக்கமாக இணங்கிய வழிக்கு பதில், எதிர்வினை அம்சத்தை உள்ளடக்கிய வழியில் வாழ்க்கையே நீடிக்கின்றது. இந்த வன்முறை சார்ந்த வழிமட்டுமே, எப்போதும் எங்கும் பெண்களின் பொது அணுகுமுறையாக உள்ளது. குடும்ப வன்முறையில் பெரும்பாலானவை, அதாவது ஆணின் உடல் சார்ந்த வன்முறை இப்படி தூண்டப்படுவதன் மூலம் நிகழ்கின்றது. பெரும்பாலான வன்முறையின் பின்னணி, விடையங்களை கையாளும் மொழி வன்முறையில் இருந்து தோன்றுகின்றது. இந்த மொழி என்பது அறிவியல் பூர்வமாக இருப்பதில்லை. எதிரியாக, வாயில் வருவதை கொட்டித் தீர்க்கின்ற வன்முறையாக இருக்கின்றது.

 

ஆணின் குடியை மனைவி கையாளுதல் என்பது எதிர் தளத்தில் இருந்தல்ல. இணக்கத்தில் இருந்து தான் சாத்தியமானது. இரண்டு எதிரிகளாக மாறி, இதை ஒழிக்கமுடியாது. அறிவியல் பூர்வமாக புரிந்து இணங்கி இதை ஒழிக்க முடியும். வாழ்க்கை பற்றிய கலையே அது தான். கலை என்பது வாழ்தல் பற்றியதும் கூடத் தான்.

 

இந்த நிலையில் ஆணின் குடி, மற்றும் போதைப் பொருள் (புகைத்தல் உட்பட) என்பது தன்னை மறக்கும் ஒரு போதைவஸ்து தான். சுயத்தை இழந்து, தனிமையில் வாழத் தூண்டுகின்ற ஒரு சமூக நஞ்சு. சுயத்தில் தான் மட்டும் இன்பம் காண்கின்ற, தான் மட்டும் நிம்மதியை அடைகின்ற, ஒரு குறுகிய குறுக்கு வழி. வாழ்வு சார்ந்த குடும்ப நெருக்கடிக்குள், சமூக நெருக்கடிக்குள் இருந்து விடுபட்டு, தான் சுதந்திரமாக வாழ்வதாக கனவு காண்கின்ற கோழைத்தனமான குறுகிய வழி. இது தனிப்பட்ட மனிதனுக்குரிய பலவீனத்தின் மேல் வெற்றி கொள்கின்றது. இதற்கு அந்த மனிதனைச் சுற்றியுள்ள சமூக சூழலே காரணமாகின்றது.

 

ஒரு தனிமனிதனின் உழைப்புக்கு அப்பால் வாழ்வையொட்டிய பிரதானமான சூழல் குடும்பமே. இந்த சூழலுக்குரிய குடும்பம் மகிழ்சியானதாக இருக்காத போது, அதன் விளைவை பலவிதத்தில் பலராலும் எப்படியும் பயன்படுத்த முடியும்.

 

நுகர்வுச் சந்தை, உழைப்பை சுரண்டுவோர், அற்பத்தனமாக ஏமாற்றி செல்வத்தை அபகரிப்பவர்கள், பாலியலை நுகர்வோர் என்று பலதளத்தில், ஒரு மனித உணர்வுகளை தமக்கு இசைவாக பயன்படுத்தப்படுகின்றனர். வெளிப்படையாக தெரியாத, ஆனால் நுட்பமாக ஒருவனை பயன்படுத்துவது காணப்படுகின்றது. இங்குள்ள இணக்கம் என்பது, பாதிக்கப்பபட்டவனுக்கு எதிரானதும் ஒரு தலைப்பட்டசமானதும். ஒரு பகுதியால் மட்டும் பயன்படுத்தப்படுவதாகும்.

 

உதாரணமாக குடும்பப் பிரச்சனைகள் மலிந்த குடும்பத்தில், மற்றொரு ஆண் தலையிட்டு அந்த பெண்ணை அடையும் பாலியல் அக்கறையான சமூக அற்பத்தனங்கள் இப்படித்தான் மலிந்து காணப்படுகின்றது. நண்பர்கள் முதல் முதலாளி வரை இதை வௌவேறு வகையில் பயன்படுத்துகின்றனர். நண்பன் ஒசியில் குடிக்கின்றான் என்றால், ஒரு முதலாளி வேலையை வாங்கிய பின் ஊற்றிக்கொடுத்து ஊக்குவிக்கும் எல்லைவரை கையாளப்படுகின்றது.

 

இந்த குடி தற்செயலான சந்தர்ப்பங்களில், தற்செயலாக இணங்கி நிகழ்கின்றது. ஆணின் பலவீனங்கள் மீது சிலர் இதனைப் பயன்படுத்துகின்றனர். இதுபோல் தான், இணங்கி நடக்கும் முறை தவறிய, பாலியல் அத்துமீறல் கூட. உண்மையில் இணக்கமற்ற குடும்ப நெருக்கடிகள், பல தவறான செயல்களுக்கு இணங்கிப்போகும் குறித்த தற்செயலான சூழலை உருவாக்கின்றது.

 

சமூக ரீதியாக விழிப்புணர்ச்சி அற்ற சூழலில், தனிமனித சுழற்சிக்குள் தான் இவை நிகழ்கின்றது. என்னவென்று தெரிந்து கொள்ளுகின்ற தன்முனைப்பான ஆர்வத்தில் கூட இது தூண்டப்படுகின்றது. சமூகம் வன்முறை கொண்டு அணுகுகின்ற போக்கினால் ஏற்படும் அச்சம், வெளிப்படையற்ற இரகசியமான ஒரு உலகை உருவாக்கிக் கொள்ளவே உதவுகின்றது. வாழ்வுக்கு உதவாத ஒவ்வொரு அத்துமீறலும், இப்படித்தான் உருவாக்கப்படுகின்றது. வெளிப்படையான அச்சம், இரகசியமான வழிகளில் ஊக்குவிக்கப்படுகின்றது.

 

(புலம்பெயர்) சமூகம் இதற்குள் பல புதிய நெருக்கடிகளை காண்கின்றது. (புலம்பெயர்) சமூத்தில் உழைப்பனின் பணத்தில் குறிவைத்து அதைக் கையாள முனைபவர்கள், (புலம்பெயர்) சமூகம் சமூகமாக வாழத் தூண்டக் கூடிய நிலைமை இல்லாமை போன்ற பல காரணங்கள், அவனின் வாழ்க்கையை சீரழிக்கின்றது. வாழ்வில் இழிந்து வாழ்கின்ற, பழக்கப்பட்ட அடிமைத்தனத்தை உருவாக்குகின்றது. அது குடி முதலாய் சமூகத்தில் எதுவாகவும் இருக்கலாம்.

 

குடிக்கு அடிமையாகி கிடப்பவனை அதில் இருந்து மீட்டல் அவசியம் என்பது, பெண்களால் புரிந்துகொள்ளப்படவில்லை. அது தனக்கு எதிரானதாக பெண்களால் பாhக்கப்படுகின்றது. இப்படி எதிர்மனப்பாங்கில் தான் பெண்களின் அணுகுமுறை அமைந்தது. இதனால் பல ஆண்கள் வீட்டை விட்டே துரத்தப்பட்டனர் அல்லது தாமாக வெளியேறி வாழவைத்தனர். பல ஆண்கள் வீதிகளில் வசிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகிச் செல்லுகின்றது. புலம்பெயர் நாடுகளில் வீதிகளில் குடித்து, அங்கே உறங்கி எழும் ஆண்கள் தொகை மெதுவாக பெருகிச் செல்லுகின்றது. பெண்களின் வன்முறையால் இந்த சமூக அவலம் நிகழ்கின்றது.

 

ஒரு சமூகத்தின் அவலம், அதன் விரக்தி, மகிழ்ச்சியற்ற போலியான வாழ்க்கை, போலிப் பெருமையில் தீர்த்துக்கொள்ளும் அற்ப மனப்பாங்கு என பல ஒருங்கே சேர்ந்து, சிதிலமைடைந்து கிடக்கும் (புலம்பெயர்) சமூகத்தையே நாம் காண்கின்றோம்.

 

ஒருபுறம் ஆண்களின் ஆணாதிக்க உலகம். மறுபக்கம் மொழி வன்முறையை அடிப்படையாகக் கொண்ட பெண்களின் உலகம். இப்படி இரு வேறுபட்ட போக்கு காணப்படுகின்றது. (புலம்பெயர்ந்த) பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகள் மீதான தீர்வுகளை ஒட்டி, சமூக வழிகாட்டல்களற்ற நிலையே காணப்படுகின்றது. இந்த நிலையில் பெண் தன்னிச்சையானதும், எழுந்தமானதுமான குறுகிய வழிகளினால், தனது குடும்பத்தை ஒழுங்குபடுத்த முடிவதில்லை. மாறாக அதுவே குடும்பத்தை பிளந்து, நிலவுகின்ற மகிழ்ச்சியை இழப்பதற்குரிய அடிப்படையான காரணமாகிவிடுகின்றது. உதாரணத்துக்கு மீண்டும் குடியை எடுப்போம்.

 

1. ஒரு ஆணின் குடியை நிறுத்த, பெண்ணின் அன்பு அவசியமானது. அதை விளக்கி அதன் தீமைகளை புரிய வைக்கின்ற வகையில், அன்புடன் கூடிய ஆதரவுடன் இணங்கியே பெண் அணுகவேண்டும். ஆண் குடிக்க தொடங்கிய சந்தர்ப்பத்தை, இன்றும் குடியை தொடர்வதற்கான காரணத்தை தெரிந்து கொண்டு, அதை போக்கும் வகையில் நுணுக்கமாக அணுக வேண்டும். காரணத்தை நன்கு தெரிந்து, நிவாரணத்தை இருவரும் சேர்ந்து காணமுனையவேண்டும். இதை எத்தனை பெண்கள் செய்துள்ளனர்.

 

2. குடிக்கும் ஆணை வீட்டில் வைத்து குடிக்கும் அளவுக்கு ஆணின் மனநிலையை மாற்றவேண்டும். இது அதிரடியாக நடந்துவிடாது. ஆண் வெளியில் குடிப்பதற்குரிய காரணத்தை நிவர்த்திசெய்வதன் மூலம் தான், வீட்டில் குடிக்க வைக்க முடியும்.



3. குடிப்பதற்குரிய உரிய பொருட்களை மனைவியே வீட்டில் வாங்கி (ஆண் வாங்கக் கூடாது) கொடுக்கவும், குடிப்பதற்கு தேவையான பொருளை மற்றைய பொருட்களை தானாக செய்து கொடுக்கும் முன்னேறிய சொந்த முயற்சியை எத்தனை பெண்கள் செய்துள்ளனர்?

 

4. வீட்டில் வாங்கி வைத்து குடிக்கும் முறைக்கு மாறிச்சென்ற வீடுகளில் கூட, அதை பலவகையில் வேண்டா வெறுப்பாகவே திட்டித் தீர்த்தபடிதான் பெண்கள் செய்கின்றனர். இதனால் ஆணின் குடியை ஒழிக்க முடிவதில்லை. ஆண் குடிப்பதற்கு ஏற்ப நண்பனை (பாட்னர்) நாடுகின்ற ஒரு பழக்கம் உள்ளது. இந்த விடையத்தில் பெண் எந்த வகையில் உண்மையான நண்பனாக இருந்து உதவுகின்றாள். தேவைப்பட்டால் குடியை நிறுத்த, பெண் குடிக்க முனைவதன் மூலம் கூட, ஆணைச் சரிப்படுத்த முனையவேண்டும்.

 

5. அளவாக குடிக்கக் கோரி, படிப்படியாக குறைத்துச் செல்லும் நண்பனாக வழிகாட்டியாக, அறிவுபூர்வமாக சிந்திக்கும் மனைவியால் மட்டும் தான் முடியும். ஆனால் எமது சமூகத்தில் அப்படி இருப்பதில்லை. பொதுவாக வன்முறையான அணுகுமுறை, எதிர்மனப்பாங்கு கொண்ட உணர்வுகளும், வேண்டாவெறுப்பான செயல்பாடுகள் மூலம் பரிமாறப்படுகின்ற வார்த்தைகளே, அவர்களுக்கு இடையிலான உறவின் மொழியாகின்றது. மொத்தத்தில் தான் நினைத்ததை சாதிக்க முடியாத எதிர்நிலையான விளைவைத்தான் பெண் அடைகின்றாள். உண்மையில் குடும்பத்தின் மகிழ்ச்சியை அக்குடும்பமே மொத்தத்தில் இழக்கின்றது. படிப்படியாக மனநிலை ரீதியாக பாதிப்பை அடைகின்ற அளவுக்கு, பெண்கள் மத்தியில் அசமந்தப் போக்கு காணப்படுகின்றது.

 

குழந்தைகளை கையாளும் விதம் கூட இப்படித்தான். மொழி வன்மறையையும், அதன் தொடர்ச்சியாக உடல் வன்முறையையுமே கொண்ட அதிகாரத்தையே மற்றவர்கள் மீது திணிக்கின்றனர். ஆண் பெண் உறவுகளிலும், குடும்ப உறுப்புகளிலும் இது பாரிய எதிர்வினையை ஆற்றுகின்றது.

 

உண்மையில் எத்தனை பெண்கள் சமூகப் புரிந்துணர்வுடன் விடையங்களை அணுகி மாற்ற முனைகின்றனர். சமூகத்தில் திருமணம் ஆணை நல்வழிப்படுத்தும் என்ற, மரபான சமூக மதிப்பீடு சார்ந்த பெண்ணின் சமூக வழிகாட்டலை, இன்றைய (புலம்பெயர்) பெண் இழந்து அதை மேலும் சிதைக்கின்ற நிலைக்கு சென்றுவிடுகின்றாள். மிகவும் துரதிஸ்ட்டவசமான நிலையில் தான், பெண் ஒரு குடும்ப சூழலில் வாழ்கின்றாள் என்பது ஒருபுறம். மறுபுறம் தனது மகிழ்ச்சியை தொலைத்துவிட்டு நிற்கின்றாள் என்பதும் உண்மை. இதுவே பெண்ணின் மன நோயாகிவிடுகின்றது. எப்போதும் தனது கணவன் தனக்கு பொருத்தமற்றவனாக கருதுகின்ற நிலைக்கு, இப்படியாக உணர்வு மட்டம் தாழ்ந்துவிடுகின்றது. சதா கணவனைக் குறை காண்கின்ற, தனக்கு எதிரானவனாக கற்பிக்கின்ற நிலைக்கு தன் மனநிலையை கற்பித்துவிடுகின்றாள்.

 

சமூகங்களுடன் பிணைப்பு அதிகமாக காணப்பட்ட காலத்தில், சமூகப்பொறுப்பு கொண்ட ஒரு பெண்ணாக பெண் வாழ்ந்தாள். இன்று இதற்கு மாறாகவே பெண்கள் நடத்து கொள்கின்றாள். ஆண் குடித்துவிட்டு நல்ல வெறியில் வரும் போது திட்டித் தீர்ப்பது. வெறி முடிந்த பின் நச்சரிப்பும் திட்டுதலுமாகவே, அவர்களின் மொத்த குடும்ப வாழ்வு அமைந்து விடுகின்றது. இதுவே பல விடையங்களிலும் காணப்படுகின்றது. வீட்டில் அசாதாரணமான சூழல் உருவாக்கப்படுகின்றது. ஆண் தனது சூழலை மறந்து வாழவே குடிக்கின்ற ஒரு நிலையில், அதை தனது வீட்டில் இழக்கின்ற சொந்த பரிதாபமும் உருவாகின்றது. இதனால் பல ஆண்கள் வீதிகளில் குடித்துவிட்டு அங்கேயே தனது காலத்தைக் கடத்துவதும், கண் மண் தெரியாது குடித்துவிட்டு வீதிகளில் புரள்வதுமாகிவிடுகின்ற சூழல் அதிகரிக்கின்றது. பலர் நிரந்தரமாகவே வீதிக்கு வருகின்றனர். இவை பல வன்முறைகளாக அரங்கேற்றுகின்றது. பல விவாகரத்துக்கள் வரை இது இட்டுச்செல்லுகின்றது.

 

இப்படி முத்தி முதிர்ந்த நிலையில் பல சமூக அவலங்கள். தனிமனித வக்கிரங்கள் விகாரமாகி வெளிப்படுகின்றது. ஆரம்ப முதலே சமூக ரீதியான அணுகுமுறையூடாக சமூக ஒழுங்குக்குள் கொண்டுவரும் முன்முயற்சி எடுக்க முடியாத நிலை உருவாகின்றது. பெண் சமூகம் பற்றி கொண்டுள்ள சிதைந்த கண்ணோட்டம், சமூக ஆளுமையற்ற நிலைக்கு தரங்குறைந்து விடுகின்றது. தான் விரும்பியதைச் சாதிக்க, வன்முறை ரீதியான அணுகுமுறையே பெண்ணின் பொது அணுகுமுறையாகிவிடுகின்றது. பொதுவாகவே எமது சமூகம் மீது நிகழும் நிலவும் அரசியல் வன்முறை, ஆணாதிக்க வன்முறை என அனைத்தும், உள்ளடக்கிய வகையில் பெண்ணும் தனது வழியில் இப்படிச் சீரழிந்தது என்பது, குடும்பத்தையே வன்முறைக்குள்ளாகியது. இணக்கமான இணங்கிய சமூகத்தன்மை குடும்பத்தில் சிதைக்கப்பட்டு, கரடுமுரடான வன்முறைகொண்ட சூழலை குடும்பத்தில் ஊற்படுத்தியது என்பது, தமிழ் சமூகத்தின் மற்றொரு பாரிய சமூகச் சிதைவுதான்.

பி.இரயாகரன்
07.07.2007

(மற்றொரு தலையங்கத்தில் இவ் ஆய்வு

1.மொழி வன்முறை மூலம், பெண் உருவாக்கும் குடும்ப அதிகாரம்

2.பெண் தன்னைச் சுற்றிக் கட்டும் பரிவட்டம்

3.சமூக வழிகாட்டலை இழந்து வெம்பும் குடும்பங்கள்

தொடரும்)