மத - ஓடத்திலேறிய மாந்தரே - பலி
பீடத்திலே சாய்ந்தீரே!

பாடுபட் டீர்கள் பருக்கையில் லாதொரு
பட்டியில் மாடென வாழ்கின்றீர் - மதக்
கேடர்கள் காலினில் வீழ்கின்றீர் - ஒண்ட
வீடுமில் லாமலே தாழ்கின்றீர்!
மத - ஓடத்திலேறிய ...

பாதிக்கு தேபசி என்றுரைத் தால்,செய்த
பாபத்தைக் காரணம் காட்டுவார் - மத
வாதத்தை உம்மிடம் நீட்டுவார் - பதில்
ஓதிநின் றால்படை கூட்டுவார்.
மத - ஓடத்திலேறிய ...

வாதனை சொல்லி வணங்கிநின் றால்தெய்வ
சோதனை என்றவர் சொல்லுவார் - பணச்
சாதனையால் உம்மை வெல்லுவார் - கெட்ட
போதனையால் தினம் கொல்லுவார்.
மத - ஓடத்திலேறிய ...

பேதிக்கும் நோய்க்கும் பெரும்பசிக் கும்,பல
பீதிக்கும் வாய்திறப் பீர்களோ! - இழி
சாதியென்றால் எதிர்ப் பீர்களோ? - செல்வர்
வீதியைத் தான் மதிப்பீர்களோ?
மத - ஓடத்திலேறிய ...

கூடித் தவிக்கும் குழந்தை மனைவியர்
கூழை நினைத்திடும் போதிலே - கோயில்
வேடிக்கையாம் தெரு மீதிலே - செல்வர்
வாடிக்கை ஏற்பீரோ காதிலே?
மத - ஓடத்திலேறிய ...

தொட்டிடும் வேலை தொடங்கலு மின்றியே
தொந்தி சுமக்கும்பு ரோகிதர் - இட்ட
சட்டப்படிக்கு நீரோ பதர் - அவர்
அட்டகா சத்தினுக் கேதெதிர்?
மத - ஓடத்திலேறிய ...

மூடத் தனத்தை முடுக்கும் மதத்தைநிர்
மூலப் படுத்தக்கை ஓங்குவீர் - பலி
பீடத்தை விட்டினி நீங்குவீர் - செல்வ
நாடு நமக்கென்று வாங்குவீர்.
மத - ஓடத்திலேறிய ...

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165puthiyaulagam.htm#dt159