குழந்தைகள் கேள்விகள் கேட்பது அறிவு வளர்ச்சியின் வெளிப்பாடு. ஆகவே கேள்விகள் கேட்கக் கேட்க நமக்கு மகிழ்ச்சி வரவேண்டும். ஆனால் பலநேரம் நமக்கு எரிச்சல்தான் வரும். அதற்கு பல காரணங்கள் உண்டு. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

1. நாம் முக்கிய வேலையாக இருக்கும்போது:
நாம் முக்கிய வேலையாக இருக்கும்போது குழந்தைகள் கேள்விகள் கேட்கும், அதுவும் உடனே பதில் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும். பதில் கிடைக்கும் வரை தொடர்ந்து கேள்வியை கேட்டுக்கொண்டே இருக்கும். இதில் நாம் சந்தோசப்பட வேண்டிய விசயம், நம் குழந்தை விடை கிடைக்கும் வரை எவ்வளவு தூரம் போராடுகிறது என்பது?. எவ்வளவு வேலையாக இருந்தாலும் உடனே குழந்தையின் கேள்விக்கு விடை சொல்லுங்கள். இதற்கு சில வழிமுறைகளைப் பின்பற்றலாம்,

முறை.1:
பதில் சொல்ல முடியாத அளவுக்கு முக்கிய வேலையாக இருந்தால், “அம்மா, முக்கிய வேலையாக இருக்கிறேன், வேலை முடிந்ததும் பதில் சொல்கிறேன்” என்று சொல்லுங்கள்.
காரணம்: சில குழந்தைகள் கேள்விகள் கேட்டவுடன், ஏதாவது ஒரு பதிலை உடனே எதிர்பார்க்கும். அப்பதில் கேட்கும் கேள்விக்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை.

முறை.2.
சுருக்கமாக ஒரு பதிலை சொல்லிவிடுங்கள். வேலை முடிந்ததும் விரிவான பதிலை கொடுத்துவிடலாம். ஆனால் வேலை முடிந்ததும் விரிவான பதிலைத் தருகிறேன் என்று சொல்லாதீர்கள். அப்படிச் சொன்னால் உடனே விரிவான பதில் வேண்டும் என்று அடம் பிடிக்கலாம்.

முறை.3.
வீட்டில் வேறு யாராவது சும்மா இருந்தால், அவர்களிடம் பதில் சொல்லச் சொல்லலாம்.

-மரு. இரா. வே. விசயக்குமார்.

 

http://anniyalogam.com/go.php?u=parentsclub08/2008/08/1.html