முன்பெல்லாம் நீரிழிவு (சருக்கரை) நோய் வயதானவர்களுக்கு மட்டுமே வரும் எனும் நிலை இருந்தது. ஆனால் தற்போதைய வாழ்க்கை முறை இள வயதினரையும் இந்த நோய்க்குள் அமிழ்த்தியிருக்கிறது.

 

உலகெங்கும் இன்று பல கோடிக்கணக்கான இளைஞர்கள் நீரிழிவு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர். நீரிழிவு நோயாளிகளின் அவஸ்தைகளில் இப்போது குழந்தையின்மை அச்சமும் புகுந்து கொண்டிருக்கிறது.

 

நீரிழிவு நோயாளிகளின் உயிரணுக்கள் வீரியம் இழந்ததாக இருக்கின்றன எனவும் இதனால் இவர்கள் குழந்தையில்லா நிலைக்குத் தள்ளப்படும் ஆபத்தும் அதிகரித்திருக்கிறது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

 

இந்த அதிர்ச்சியூட்டும் தகவலின் வீரியத்தை அதிகரிக்கும் விதமாக கருத்தரித்தாலும் மனைவியருக்கு கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு அதிகம் என அவர்கள் அச்சமூட்டுகின்றனர்.

 

வாழ்க்கைச் சூழல் இளைஞர்களை ஆரோக்கியமற்ற உணவுகளுக்கும், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைக்கும் தள்ளி விட்டது. எனவே இளைஞர்கள் போதிய உடற்பயிற்சி இல்லாமலும், ஆரோக்கியமான பழக்கங்கள் இல்லாமலும் அதிக எடை உட்பட பல்வேறு உடல் பாதிப்புகளைச் சந்திக்கின்றனர். இவையெல்லாம் நீரிழிவு நோய் தாக்குதலுக்கு முக்கியமான காரணிகள் என்பது குறிப்பிடத் தக்கது.

 

குழந்தையின்மைக்குக் காரணம் பெண்கள் என்னும் தவறான சிந்தனைகளை இந்த ஆராய்ச்சி அழித்திருக்கிறது. ஆரோக்கியமான வாழ்க்கைக்குள் வர ஆண்களை எச்சரித்திருக்கிறது.

 

http://sirippu.wordpress.com/2008/07/11/for_guys/