book _6.jpgநவீனத்துவத்தின் வேகமான வளர்ச்சி பெண்ணின் மீதான நிலப்பிரபுத்துவ அடிமைத்தனத்தை விடுவித்தது. நிலப்பிரபுத்துவ ஆணாதிக்கம் பெண்ணைப் பொருளாதார ரீதியில் ஆணை எதிர்பார்த்து உருவாக்கிய பண்பாட்டுக் கலாச்சார அடிமைத்தனத்தை முதலாளித்துவ அமைப்பின் வளர்ச்சியில் தகர்ப்பது அவசியமாக்கியது. முதலாளித்துவ வளர்ச்சி நிலப்பிரபுத்துவச் சிதைவுகள் மீது கட்டப்பட்டது. பெண் வீட்டுக்கு வெளியில் சென்று பொருளாதார ரீதியில் கூலி பெறும் உழைப்பாளியாக மாறிய வரலாற்று வளர்ச்சி என்பது, ஆணின் பொருளாதாரத்தை ஒட்டிப் பெண் சிந்திக்கும் போக்குக்கு முடிவு கட்டியது.

திருமணத்தில் ஆணைச் சார்ந்து பெண் பொருளாதார ரீதியில் நீடித்த குடும்ப வடிவம் மாற்றம் கண்டது. இங்கும் ஓர் அடிப்படைத் திரிபு இன்று விதிவிலக்கின்றி உலவுகின்றது. அதாவது பொருளாதார ரீதியில் பெண் சுதந்திரமடைந்தால் அவள் விடுதலை அடைந்து விடுவாள் என்று மார்க்சியம் விதிந்துரைத்ததாகவும், பெண் பொருளாதார ரீதியில் சுதந்திரம் அடைந்தும் விடுதலை அடையவில்லை என எல்லா மார்க்சிய எதிர் பெண்ணியல்வாதிகள் தங்களை நியாயப்படுத்துகின்றனர். இது அப்பட்டமாக மார்க்சியத்தைத் திரித்த பொருளாதார வாதம் ஆகும்;. அத்துடன் அராஜகவாதம் ஆகும்.


மார்க்சியம் பெண்ணின் சுதந்திரமான சிந்தனைக்கும், ஆணில் இருந்து வெளிவர பெண்ணின் உழைப்பு பொருளாதார ரீதியில் அங்கீகாரம் பெறுவதையும், பெண் வீட்டுக்கு வெளியில் வருவதையும் முன் நிபந்தனையாக வைத்தது. இதுவே பெண்ணை விடுவிக்கும் என்று வைத்ததில்லை. இவற்றையே பெண்ணின் விடுதலைக்கு முன்நிபந்தனையாக்கியது என்று திரித்துக் காட்டப்படும் எல்லாக் கருத்துகளின் பின்பும் மார்க்சிய எதிர்ப்பு வெளிப்படுவதைக் காணமுடியும்;. இதை முன்னிறுத்தும் சில பிரிவுகள் வர்க்கப் போராட்டத்தைக் கைவிட்டவராகவும் இருக்கின்றனர். மார்க்சியம் இதை எல்லாத் துறையிலும் காலாகாலமாக எதிர்த்துப போராடி வந்தது, வருகின்றது.


பொருளாதார ரீதியில் நவீனத்துவ உற்பத்திமுறை பெண்ணை வீட்டுக்கு வெளியில் இட்டுச் சென்று கூலி பெறும் உழைப்பாளியாக மாற்றியது என்பது பெண் விடுதலையின் அக்கறையின்பால் அல்ல.


மாறாக முதலாளித்துவ உற்பத்திக்கும், அதன் வளர்ச்சிக்கும் பெண்களின் மலிவு உழைப்பு சார்ந்த பங்களிப்பு அவசியமாகியது. இன்றைய நவீனச் சமுதாயத்தின் வளர்ச்சியில் பெண்ணின் பங்களிப்பு என்பது நிபந்தனையாகி, வளர்ச்சியின் ஆதாரமாக்கியது. இவை பண்பாட்டு ரீதியில், கலாச்சார ரீதியில் ஏற்றுக் கொள்ள இன்றைய மேற்குச் சமூகங்கள் மறுத்த போதும், இதுவே எதார்த்தமாக இருந்தது.


பெண்ணின் கூலி பொருளாதார ரீதியாக ஆணைச் சார்ந்து இருப்பதை முடிவுக்குக் கொண்டு வந்தது. ஆணின் பொருளாதார ரீதியான ஆதிக்கம் என்பது தகரத் தொடங்கியது. இது பல வேதனையான இழுபறியுடனும், போராட்டத்துடனும்தான் வளர்ச்சி பெற்றது. ஆரம்பத்தில் பெண்ணின் கூலி என்பது ஆணுக்குச் சொந்தமாக இருந்தது. அதை ஆண் தீர்மானிப்பவனாக இருந்தான். பின்னால் பெண் தனது கூலி மீதான உரிமையைக் கோரியபோது, ஆணும் பெண்ணும் சேர்ந்து அல்லது ஆணின் வரையறுக்கப்பட்ட அதிகாரத்துக்குள் தனது கூலியின் உரிமையைப் பெற முடிந்தது.


பிரான்சில் ஒரு பெண் தனது சொந்த உழைப்பு சார்ந்த கூலியை வங்கியில் போட, தனக்காகத் தனித்து வங்கிக் கணக்கைப் பெண் திறக்க முடியாமல் இருந்தது. கி.பி.1970-களில்தான் பெண் தனித்து வங்கியில் கணக்கு வைத்திருக்கும் உரிமையைப் பெற்றாள். பெண்ணின் உழைப்பையும், கூலியையும் கூட நவீன முதலாளித்துவ ஜனநாயகம் அங்கீகரிப்பதில் தயாராக இருக்கவில்லை பெண்ணின் போராட்டம்தான், தனது கூலிக்குக் கூட ஆணாதிக்கத்திடமிருந்து விடுதலையைப் பெற்றுத் தந்தது. ஆனால் பெண் கூலியைத் தனது சொந்தக் கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்த அதே நேரம், அதைப் பயன்படுத்துவதில் ஆணாதிக்க எல்லைக்குள் நீடிக்கின்றாள். இங்கு தனிப்பட்ட ஆண் இதைத் தீர்மானிக்கவில்லை. மாறாக ஆணாதிக்கச் சமூக அமைப்பு தனக்குள், அதன் பண்பாட்டுக்குள் செலவு செய்ய கட்டாயப்படுத்துகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுதளத்தில் பெண் தனது கூலியின் உரிமையைக் கொண்டு பண்பாட்டு ரீதியாக, ஆணாதிக்கச் சீரழிவில் இறங்குவது அதிகரிக்கின்றது.


நிலப்பிரபுத்துவ வடிவத்தில் நிலவிவந்த ஆணாதிக்கத் தொடர்ச்சி, முதலாளித்துவச் சமுதாயத்தில் பண்பாட்டுக் கலாச்சார வடிவில் பெண்ணை அடிமைப்படுத்தியது. பெண்ணின் கூலியைக் கூட அவள் அனுபவிக்க அனுமதிப்பது, தனிப்பட்ட ஆண்களை விட முதலாளித்துவ அமைப்பின் அதிகாரத்துக்குச் சவால் விடுபவையாக இருந்தது.


ஆணாதிக்க வரலாற்றில் பெண்ணின் உழைப்பு கூலியற்ற இலவசமான உழைப்பாக இருந்த சமூகக் கண்ணோட்டத்தில், ஆண் சார்ந்த சுரண்டல் வடிவமும் அதையொட்டிய அமைப்பும் தகர்கின்ற போக்கு சுரண்டல் அமைப்பையே தகர்த்துவிடும் என்பது எதார்த்தமாக இருந்தது. பெண் உழைப்பும், அதன் கூலிக்குப் பெண் பெறும் உரிமை என்பது ஆணாதிக்கச் சுரண்டல் சமுதாயத்திடம் ஆணைப் போல் கூலி உயர்வும், ஆணைப் போல் உழைப்பில் சமக் கூலி கேட்பதும், ஆணைப்போல் புரட்சியைச் சிந்திப்பதும் இந்தச் சுரண்டல் முதலாளித்துவ அமைப்புக்கு ஆபத்தானதாக இருந்தது. பெண்ணின் சுயேட்சையான அங்கீகாரம் தனிப்பட்ட ஆணைவிட ஆணாதிக்கச் சுரண்டல் சமுதாயத்தையே பீதிக்குள்ளாக்கியது.


இந்த நிலையில் பெண்ணின் உழைப்புக்கும், கூலிக்கும் உரிமை கோரிய போராட்டம், தனிப்பட்ட ஆண் குடும்பத்துக்குள் இதை விட்டுக் கொடுத்த போது, இந்தப் போராட்டம் சமூக அமைப்பில் மேலும் தீவிரம் கண்டது. சட்டப்படியான உரிமையாகப் பெண்ணுக்கு முதலாளித்துவ அமைப்பு படிப்படியாகத் தன்னைப் பலப்படுத்தியபடி சலுகையாக ஆணாதிக்கத்திடம் விடுதலையாகக் கூறிக் கொடுத்த போது, அதை ஈடுகட்ட மற்ற நாடுகளை அதிகமாகச் சுரண்டுவதை முதலாளித்துவம் ஆதாரமாகக் கொண்டது.


பெண்ணின் உழைப்புக்குக் கிடைத்த கூலி இந்த முதலாளித்துவ அமைப்பில் பெண்ணின் உரிமையான போது, ஆணைப் போல் தனிச் சொத்துரிமையின் எல்லைக்குள் புதிய நெருக்கடியைக் கொண்டுவந்தது. தனிச்சொத்துரிமை கூட்டு வாழ்க்கையின் எதிரி என்பதால் ஆணும் - பெண்ணும் தனிச் சொத்துரிமையைத் தனித்தனியாகப் பெற்ற போது ஒருதாரமணக் குடும்பத்தின் வடிவம் தீவிரமான நெருக்கடியைச் சந்தித்தது. மரபான குடும்பத்தில் ஆணாதிக்கப் பொருளாதாரம் சார்ந்த தீர்மானகரமான ஆணின் பங்கை மறுத்து, பெண்ணும் தீர்மானகரமான பங்கைக் கோருவது தொடங்கியது. இது குடும்பத்தைச் சிதைப்பது அல்லது மீள அமைப்பது என இரு வடிவங்களையும் தீவிரமாக்கியது.


கி.பி.1970-களுக்குப் பின்னால் தீவிரமாகிய விவாகரத்தும், குடும்பத்துக்கு வெளியில் சேர்ந்து வாழ்தலும் (பகுதி இரண்டில் பார்க்கவும்: புள்ளிவிபரத்தை) பெண்ணின் கூலி மீதான உரிமையிலும், பெண்ணின் உழைப்பு மீதான மதிப்பிலும் உருவானது. அத்துடன் ஏகாதிபத்திய ஜனநாயக வடிவம் மேலும் ஆழப்படுத்தியது. இது எல்லை கடந்த சூறையாடலைச் சட்டவடிவமாக்கியது. கி.பி.1970-களுக்குப் பின்னால் தனிமனிதப் பொருளாதாரப் பண்பாட்டில் இந்த ஜனநாயகத்தைக் கோருவதும், அமுல்படுத்துவதும் அதிகரித்தபோது, குடும்பச் சிதைவுகள் அதன் விளைவாகி உற்பத்தியானது.


பெண்ணின் உழைப்புக்கு மதிப்பும், உரிமையும் தனிச்சொத்துரிமையின் வடிவில் கிடைத்த போது, அதற்கே உரிய குணாம்சத்துடன் இது சீரழிவுக்கு வழிவிட்டது. இந்தச் சீரழிவு காதல், அன்பு.... போன்றவற்றைக் கூட வியாபாரமாக்கிவிட்டது. குறைந்தபட்சம் நிலப்பிரபுத்துவச் சமுதாயத்தில் நீடித்த மனித விழுமியங்களைக் கூட தனிச் சொத்துரிமை பெண்ணிடம் இருந்து சூறையாடிவிட்டது. ஒருதாரமணத்தில் பெண் காதலிக்கவும், அன்பு செலுத்தவும் செய்த மனித விழுமியத்தை, நவீனத்துவம் தனிச்சொத்துரிமை வழியில் பெண்ணுக்குத் தவிர்க்கமுடியாது கூலி வழங்கிய போது, பெண் ஆணாதிக்கத்தின் நிலைக்குள் தாழ்ந்து அன்பு, காதல் ஆகியவற்றைத் துறந்து ஆணைப்போல் சீரழிந்து போனாள்,போகின்றாள். ஆணாதிக்கம் எதை எல்லாம் மனிதனின் உன்னதமானவை எனப் பிரகடனம் செய்து இயற்கையையும், மனிதனையும் சூறையாடியதோ, அதை எல்லாம் பெண்ணினக் கோரிக்கையாகவும், உரிமையாகவும் அங்கீகரிப்பதன் மூலம், பெண்ணும் ஆணாதிக்கத் தனிச்சொத்துரிமை பண்பாட்டுத் தளத்தில் ஆணைப் போல் சீரழிந்தாள்.


இது ஒருபுறம் நிகழ, மேற்கத்தியச் சமூகத்தில் உழைக்கும் மக்களுக்கிடையில் உள்ள இடைவெளி குறைந்து செல்வதன் மூலம், மக்கள் பொதுவாகவே சொத்துரிமையற்ற பரந்த வக்கற்ற கூட்டமாக மாறிவிட்டனர். சமூகத்தின் மிகக்குறைந்த ஒட்டுண்ணி வர்க்கமே சொத்துரிமை வர்க்கமாக மாறியதும், பரந்துபட்ட மக்கள் தமது சொத்துக்களை இழந்து போனதும் குடும்ப அமைப்பில் தீவிரமான மாற்றத்தை ஏற்படுத்தியது. சொத்துக்களின் வாரிசுகளை உருவாக்கிய ஒருதாரமணங்கள் சொத்தற்ற வர்க்கம் முன் அர்த்தமற்றதாகியது. இது பாரம்பரியக் குடும்ப அமைப்பை மறுதளத்தில் சிதைத்தது. இங்கும் கூட பாரம்பரியத் திருமணத்துக்கு வெளியில் சேர்ந்து வாழ்வதும், பிரிவதும் என்ற போக்கு உருவானது.


தனிச்சொத்துரிமை வடிவில் இருந்து பிளவும், வாழ்வும் ஏகாதிபத்தியப் பண்பாட்டால் நடக்க, சொத்துரிமை இழந்த வடிவின் கீழ் இருந்து உருவான பிளவும், வாழ்வும் எதிர் எதிர் தன்மையில் முரண்பட்ட சமூகப் பிளவை ஏற்படுத்தியுள்ளது. தனிச் சொத்துரிமையிலான குடும்பப் பிளவு மூலதனக் குவிப்பில் பிளவாகவும், சொத்துரிமையற்ற குடும்ப பிளவு மூலதனத்துக்கு எதிரான ஐக்கியத்திலும் வளர்ச்சி பெறுகின்றது. இங்கு தனிச்சொத்துரிமை ஆதிக்கக் கருத்தியலாக உள்ள நிலையில் குடும்பச் சீரழிவு என்பது விபச்சாரக் கட்டத்தில் வளர்ச்சி பெறுகின்றது.


ஆண் - பெண் இயற்கையின் தேர்வையும், கூடி வாழ்வதையும் மறுக்கும் தனிச்சொத்துரிமையால் விளையும் ஆணாதிக்கப் பண்பை, ஜனநாயகமாகப் பெண் கோரியபோது, பெண் ஆணாகத் தரம் தாழ்ந்து போகின்றாள்.இதனால் ஆண்-பெண் இருவரும் கூட்டுவாழ்க்கையில் இருந்து மேலும் தனிக்கட்டையாகியுள்ளனர்.


குறைந்த பட்சம் ஒருதாரமணத்தில் ஆண் - பெண்ணுக்கு இடையில் நீடித்த உறவு என்பது கூட நிகழமுடியாத பிளவை, நவீனத்துவ நுகர்வுப் பொருளாதாரம் தனிச் சொத்துரிமையைப் பெண்ணுக்கு அங்கீகரித்ததன் வடிவில் ஏற்படுத்திவிட்டது. இந்த ஆண் - பெண் உணர்வுகள் முன்பைவிட மோசமாக நலமடிக்கப்பட்ட நிலையில் தனிக்கட்டையாகியுள்ளனர். இங்கு இதனால் ஏற்பட்ட ஒருதாரமணத்துக்குள்ளான பலதாரமணம் விபச்சாரமாகப் பரிணாமம் அடைந்துள்ளது. இது பல பக்கவிளைவுகளை உற்பத்தி செய்கின்றது.


பிரான்சில் 50 இலட்சம் பேர் மோசமாகக் குடிப்பவர்களாக உள்ளனர். இதில் 20 இலட்சம் பேர் குடிக்கு அடிமையாகி உள்ளனர். இதனால் வருடாவருடம் 50,000 பேர் இறக்கின்றனர். இதில் 3,000 பேர் போதையால் வீதி விபத்தில் இறக்கின்றனர். மது மூலம் ஏற்படும் நோய்க்கான மருத்துவச் செலவாக வருடம் 8,000 கோடி பிராங் (இது இலங்கைப் பணத்தில் 92,000 கோடி ரூபாயாகும். இது இலங்கை மக்களின் தேசிய வருமானத்தை விட அதிகமாகும்.) செலவாகின்றது.


ஐரோப்பாவில், முதல் குடிகாரர்கள் நாடாகப் பிரான்ஸ் இருக்க, ஐரோப்பியர் வருடம் வருடம் ஒவ்வொரு நபரும் 119 லிட்டர் (டவைசந) மது குடிக்கின்றனர். பிரான்சின் மதுபானத் தொழிலில் 5 இலட்சம் பேர் ஈடுபடுகின்றனர். 15 இலட்சம் பெண்கள் குடிகாரிகளாக ஆக உள்ளனர். இது கி.பி. 1981-இல், 8 இலட்சம் மட்டுமேயாகும். இதில் பெருமளவில் பாதிக்கப்படுவது திருமணம் செய்யாத பெண்களே. பொதுவாக ஆண்கள் பகிரங்கமாகக் கடைகளில் சமூக அங்கீகாரத்துடன் குடிக்க, 92 சதவீதமான பெண்கள் மறைவிடங்களில் ஒளிந்து குடிக்கின்றனர். இளம் சமுதாயத்தில் நான்கு பேருக்கு ஒருவர், 12வயது முதல்19 வயதுக்கு இடைப்பட்ட வயதில் குடிக்கின்றனர். 15 வயது இளம் சமுதாயத்தினர் நிரந்தரக் குடிகாரர்களாகவும், புகைப்போர்களாகவும், போதைவஸ்து பாவிப்போர்களாகவும் உள்ளனர்.(15ஃ16.4.1999)1


தனிமனிதச் சோகங்களைப் போதையில் மறப்பதும், தீர்க்க முனைவதும் இச்சமூகத்தில் பாதையாக மாறியுள்ளது. தனிமனித அவலங்களின் வெடிப்பு அதற்குள்ளேயே சீழாகின்றது. இந்தச் சீழ் மாற்றமுடியாத நாற்றத்தால் புழுப்பிடித்துப் போகின்றது. திருமணம் செய்யாத பெண்கள் அல்லது தனித்து வாழும் பெண்கள் தமது தனிமை மற்றும் பாலியல் நெருக்கடிகளைப் போதை மூலம் தீர்ப்பது, மறப்பது மனித அவலமாகின்றது. இந்தத் திசையை நோக்கி மனித நாகரிகம் நாலுகால் பாய்ச்சலில் குதித்துச் செல்லுகின்றது.


இது ஒருபுறம் நிகழ்கின்ற போது, மறுதளத்தில் டிஸ்கோ கலாச்சாரம் பாலியல் தீர்வை விபச்சார எல்லைக்குள் நுகர்வு வடிவில் அள்ளித் தெளிக்கின்றது. டிஸ்கோவுக்குள் பாலியல் வக்கிரம் பார்க்க - செய்ய பணம் கொடுத்து, போதைக்குப் பணம் வாரி வழங்கி, பணம் கொடுக்காத விபச்சாரமாக, பரஸ்பரம் நுகர்வை அடிப்படையாகக் கொண்டு மிதமிஞ்சிய போதையில் நடக்கும் பாலியல், அல்லது போதையின்றி நடக்கும் காம இசையின் விபச்சாரம், ஆண் - பெண் உறவை மிகவும் கீழ்நிலைக்குள் தாழ்த்தியுள்ளது.


அன்பு, காதல் எல்லாம் நுகர்வுப் பண்பாட்டில், டிஸ்கோவுக்குள் ஆணும் பெண்ணும் இழந்து பாலியல் பண்டமாக, இயந்திரமாக மாறிய சோகம் கட்டுடைத்த பண்பாடான ஏகாதிபத்தியத்தின் (பின்நவீனத்துவத்தின்) கொடையாகும்.


இன்னுமொரு கூட்டம் பணம் கொடுத்து பாலியல் தேவையைப் பூர்த்தி செய்வதைத் தீர்வாக்கியது. மேற்கு நாடுகளில் இரண்டு பேருக்கு ஓர் ஆண் என்ற வீதத்தில் பாலுறவுக்காகச் சொந்த நாட்டிலேயே பணம் செலுத்தி இருக்கின்றான். 15 முதல் 20 சதவீதமான ஆண்கள் தொடர்ச்சியாகப் பாலுறவுக்குப் பணம் செலுத்துகின்றனர். இந்தப் பிரிவில் உள்ளோரில் 5 முதல் 10 சதவீதம் பேர் தொடர்ச்சியான பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்கள்.2


சமூகத்தை விட தனிமனித உரிமைகளை அதிகமாகக் கோரும் போதும், தனிச் சொத்துரிமை சமூகத்தின் பண்பாட்டுக் கலாச்சார வாழ்வியலைத் தீர்மானிக்கும் போதும், ஆணின் தலைமையிலான குடும்ப அமைப்பில் பெண் சொத்துரிமையைச் சார்ந்து தனிச் சொத்துரிமை எல்லைக்குள் உரிமை பெறுகின்றபோது, ஆண்-பெண்ணின் பிளவு மேலும் அகலமாக அதிகரித்த அவலங்களும், இயல்பற்ற பாலியல் நெருக்கடிகளும் சமூகத்துக்கு முன் தோன்றியுள்ளது.


பாலியல் பூர்த்தியை விபச்சாரம் கணிசமான அளவுக்குத் திருப்தி செய்கின்றது. இதனால் விபச்சாரம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படுகின்றது. இதைவிட இதைக் கோரிக்கையாகவும், உரிமையாகவும் கோருவது பெண்ணியல் நடைமுறையாகின்றது. பாலியலின் இயற்கைத் தேர்வைத் தேவையில் இருந்து அன்னியப்படுத்திய கட்டற்ற சுதந்திரத்தில் 50 சதவீதமான ஆண்கள் விபச்சாரத்துக்காகப் பணம் கொடுத்தனர் என்பது இந்த ஜனநாயகத்தைக் கேள்விக்குள்ளாக்கும் நடைமுறையாக எம்முன் உள்ளது. ஆனால் இதை விட இந்தச் சமுதாயத்தின் வக்கிரத்தை நோக்கி தாமும் மாற நினைக்கும் போக்கு, எதார்த்த நடைமுறையில் இருந்து சமுதாயச் சிந்தனை அன்னியப்பட்டுப் போவதன் கிறுக்குத்தனம் தான் இதன் ஆதாரமாகின்றது. எதார்த்தத்தை மறுத்து, கற்பனையான சொர்க்கத்தில் சமுதாயம் கட்டிப் பாதுகாக்கப்படுவதை அடிப்படையாகக் கொண்டு ஆளும் வர்க்கங்கள் தமது சொந்த நலன்களுடன் ஈடுபட, சமுதாயம் அதன் பின் இழுபட்டுச் செல்ல, விடுதலை பற்றிய மனிதப் பிதற்றல் கோட்பாடுகள் இதற்குள் மார்க்சியத்தை மறுத்தபடி உருப்பெறுகின்றது.


இதன் விளைவை மேலும் பிரான்சில் ஆதாரமாகப் பார்ப்போம்;. கி.பி.1998 இல், சிறுவர் சிறுமிகளின்; மீதான வன்முறையைப் பற்றி அறிக்கையில் காணலாம் (14.9.1999);3


அட்டவணை - 1


வகை                                                           எண்ணிக்கை       ஆண்கள்சதவீதம்      பெண்கள் சதவீதம்
பாலியல்வதைக்குஉட்பட்டோர்             6,800                               25%                                    75% 

உடல் ரீதியான வன்முறைகள்           7,000                               55%                                     45% 

உடல் ரீதியற்ற வன்முறைகள்          1,800                                50%                                     50% 

மிகமோசமான புறக்கணிப்புகள்         5,400                                55%                                    45%


பிரான்சில் பாலியல் துன்புறுத்தலுக்குக் கி.பி.1998-இல்,83,000 பிள்ளைகள் பாதிக்கப்பட்ட நிலையில், இது கி.பி.1994-இல், 60,000 பேர் மட்டுமேயாகும். கி.பி.1998-இல், இதனால் நீதி கோரி 49,000 பேர் நீதிமன்றம் சென்றனர்.ஆனால் கி.பி.1994-இல், 30,000 பேரே நீதிமன்றம் சென்றுள்ளனர்.


இவை பாடசாலைக்குள் நடப்பவை என்பதை ஒத்துக் கொண்ட ஆய்வுகள் வெளியில் நடப்பவற்றை முழுமையாகக் கொண்டு வரமுடியவில்லை என்பதையும் ஒத்துக் கொண்டுள்ளது. சமுதாயம் என்பது முதலாளித்துவத் தனிமனித ஜனநாயகத்தின் சூறையாடலால் எல்லாத் தளமுமே வன்முறைக்குள்ளாகி சீரழிகின்றது.


மேற்குச் சமுதாயத்தின் அவலத்தையும், அதன் கட்டற்ற சுதந்திர அதிகரிப்பையும் இவை தெளிவாகவே காட்டுகின்றது. அத்துடன் ஆண்-பெண் வேறுபாடற்ற வகையில் பாலியல் துன்புறுத்தலை இச்சமூகம் உற்பத்தி செய்கின்றது. முன்பு பெண் மட்டும் பாதிக்கப்படல் என்பது மாறி,இன்று ஆண்களும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதன் மூலம் பெண் ஆணாதிக்கமயமாகிய வக்கிரத்தைக் காட்டுகின்றது. பெண்ணின் விடுதலை என்பதை எதிர்திசையில் (ஆணாதிக்கப் பாதையில்) வக்கிரப்படுத்தியதில் பெண்ணியல் அமைப்புகளின் தவறான கோரிக்கைகள், போராட்டங்கள் உதவிசெய்தன. ஆணில் இருந்து பெண்ணை அன்னியப்படுத்தும் அனைத்துக் கோரிக்கைகளும், சமுதாயக் கூட்டு நலனுக்கு எதிராக முன்நிறுத்திய போது, பெண் வன்முறையாளினியாக மாறினாள், மாற்றப்பட்டாள்.


சிறுவர்-சிறுமி மீது ஏவும் பாலியல் வன்முறைகள் தனிப்பட்ட ஆண், பெண்ணின் நடத்தைகளின் விளைவுகள் அல்ல. மாறாகப் பொருளாதார அமைப்பின் பண்பாடு அற்ற சமூகத்தின் விளைவுகளாகின்றது. பெண் தனது தனிமனிதச் சுதந்திரத்தைத் தனிச் சொத்துரிமையில் பெற்றதைத் தொடர்ந்து புதிய வடிவில் பாலியல் நெருக்கடியைச் சந்திக்கத் தொடங்கினாள். அவள் முன்பு கிடைத்த ஆணின் ஒருதாரமண இயந்திரப் பாலியலைக் கூட இழந்து போனபோது, பெண்ணும் பாலியல் வன்முறையில் ஈடுபடுவது எதார்த்தமாகியது. பெண்ணினால் வன்முறைக்குள்ளாகிய 25 சதவீதமான ஆண்குழந்தைகள் 1,700 பேர் மீதான பாலியல் அத்துமீறல்கள் துல்லியமாகப் பெண்ணின் சீரழிவை வெட்டவெளிச்சமாக்குகின்றது.


பொருளாதாரச் சுதந்திரத்தையும், பண்பாட்டுக் கலாச்சாரச் சுதந்திரத்தையும் விபச்சாரச் சீரழிவில் பெற்ற போது, ஆண்-பெண்ணின் பாலியல் நடத்தைகள் நெருக்கடியைச் சந்தித்தது. இதனால் பாலியல் வன்முறை எதிர் திசையில் வேகமாக அதிகரித்துச் செல்கின்றது. கி.பி.1975-இல், பிரெஞ்சுச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டோரில் 5 சதவீதமே பாலியல் சார்ந்த குற்றத்தைச் செய்திருந்தனர். இது கி.பி.1999-இல், 21 சதவீதமாக அதிகரித்துள்ளதுடன் தண்டனைக்காலம் பொதுவில் 4 மாதத்தில் இருந்து 9 மாதமாக அதிகரித்துள்ளது.4 இந்தக் குற்றங்கள் பாலியலின் பின்னாலான போலி ஜனநாயகச் சுதந்திரத்தின் நெருக்கடியை அப்பட்டமாக நிர்வாணமாக்குகின்றது. இதன் போக்கில் பாலியல் குற்றவாளிகளாகப் பெண்களும் உருவாகத் தொடங்கி உள்ளனர்.


இந்த ஆணாதிக்க ஜனநாயகத்தில், பெண் பெற்ற தனிச் சொத்துரிமை, ஜனநாயகச் சுதந்திரம் என்பது பெண்ணின் ஆணாதிக்கமயமாதலும், ஆணைப் போல் பெண்ணும் வன்முறையில் ஈடுபடுவது நிதர்சனமான எதார்த்தமாகியுள்ளது.


இதை மேலும் ஆராய மற்றுமொரு புள்ளி விபரத்தை (அட்டவணை:2) ஆராய்வோம். மேற்கு நாடுகளின் கோட்பாட்டு மையமான பிரான்சில் வெளிவந்த லிபரேசன் என்ற பத்திரிக்கை 26-02-1998 வெளியிட்டுள்ள கட்டுரையில் இருந்து பார்ப்போம்.


சிறுவர், சிறுமியர் ஓரினச் சேர்க்கைக்கு எப்படி பல்கலைக்கழகப் பகிடிவதைப் (ராக்கிங்) போன்று பயன்படுத்தப்படுகின்றனர் எனப் பார்ப்போம்.


அட்டவணை - 2


ஆண்டு                                                                  கி.பி.1985                  கி.பி.1991                     கி.பி.1993
யாருடன்                                                               சதவீதம்                    சதவீதம்                     சதவீதம்
தகப்பன்                                                                      15                                  23                                   27
தாய்                                                                              27                                  37                                  43
சகோதரன்-சகோதரி                                             32                                  44                                   49
பாடசாலை                                                                35                                  43                                   45
நண்பர்கள்                                                                 41                                  56                                   62


பொருளாதார ரீதியில் வயது வந்த ஆண் பெண்ணுக்கு இடையில் ஏற்படும் பாலியல் நெருக்கடி, பொருளாதார ரீதியில் பலமற்ற, பலவீனமான சிறுவர் சிறுமி மீதான ஓரினச் சேர்க்கையாக மாறிவிட்டது,மாறிவிடுகின்றது. இதில் ஆண், பெண் வேறுபாடு இன்றி சிறுவர் மீது நடத்தும் பாலியல் வேட்டைகள், சிறுவர், சிறுமிகளின் உளவியல் பிரச்சினைகளும், இதனால் உருவாகும் புதிய பண்பாடுகள், கலாச்சாரங்கள் மேலும் மேலும் சீரழிவின் வழியில் வெதும்புகின்றது. இந்த வன்முறையில் அதிகளவில் பெண்கள் ஈடுபடுவது எப்படி சாத்தியமானது? ஆண-;பெண் உறவில் பொருளாதார நுகர்வில் ஏற்பட்ட நெருக்கடி விரிசலாகிவிடும் போது பலவீனமான பிரிவு சுயத்தியாகம் செய்யக் கோருகின்றது. இதற்குப் பண்பட்ட, கலாச்சார அடிப்படைகள் இசைவாக்கமடைகின்றது.


ஆண்-பெண்ணின் தனிமனிதச் சுதந்திரங்கள் பாலியல் தேவைக்கு முரண்நிலையாக, இந்த முதலாளித்துவச் சமூகம் கொடுக்கும் கொடையாகும். தனிச்சொத்துரிமை மீதான பெண்ணின் சுதந்திரம் தனிச்சொத்துரிமை அமைப்பான ஏகாதிபத்தியச் சகாப்தத்தில் ஆணையும்,பெண்ணையும் பிளக்கின்றது.


இந்தப் பிளவு என்பது பாலியலைப் பண்டமாக்குகின்றது. இந்தப் பண்டம் என்பது நுகர்வைத் தீவிரமாக்குகின்றது. இது பாலியலில் திருப்தி இன்மையையும், அதிக நுகர்வை தேடி அலைவதையும் பண்பாடாக்கியுள்ளது. இந்தப் பாலியல் உறவு தேவையை நிராகரித்து, நுகர்வாக்கி அலைய வைத்த போது அது விபச்சாரமாகச் சீரழிகின்றது. இந்த விபச்சார நுகர்வையும், திருப்தியின்மையையும் அனுபவிக்க முடியாத நிலையில் அல்லது அதற்குள்ளும் புழுத்துப் போன சமூகம் பாலியல் வன்முறையை எல்லாத் தளத்திலும் கையாள்வதைத் தொடர்ச்சியாக வெளிவரும் புள்ளிவிபரங்கள் எதார்த்தத்துடனும், மார்க்சியப் பாலியல் கோட்பாட்டு விளக்கத்துடனும் பொருந்திப் போகின்றன.


இந்தச் சமூகத்தில் பெண்ணுக்குக் கிடைத்த தனிச் சொத்துரிமையிலான உழைப்பின் மதிப்பையும், ஆணுக்குக் கிடைத்த உழைப்பின் மதிப்பையும் தமக்கிடையில் முதன்மைப்படுத்தாத ஆண்-பெண் சுயநிர்ணயமான குடும்ப அமைப்பைப் பேணுவதிலும், அதற்காகச் சமூகத்துக்கு எதிராகப் போராடுவதிலும் இந்தச் சமூகத்தில் ஒரு பகுதியினர் முன் நிற்கின்றனர். நுகர்வு பற்றி, திருப்தியின்மை பற்றி கனவு இன்றி பாலியலைத் தேவைக்குட்படுத்தி வாழும் குடும்பங்கள் மேற்கில் சுயநிர்ணயத்தை அடிப்படையாகக் கொண்ட முன்னுதாரணக் குடும்பமாக உள்ளனர். இந்தச் சமூக வடிவமும் மேற்கில் பலமான நிலையில் இருப்பதைக் காணமுடிகின்றது. ஆனால் பலமற்ற பொருளாதாரப் பிரிவைப் பிரதிபலிப்பதால் இவர்களின் கருத்துகள் போராடும் எல்லைக்குள் உள்ளன.


ஏகாதிபத்திய நுகர்வு தனியுரிமையிலான சொத்துரிமை பண்பாட்டுக் கலாச்சாரத்தால் ஆணின் சமூக ஆதிக்கம், இந்தச் சமூகத்தின் பொதுவடிவமாக எல்லாத் தளத்திலும் காணப்படுகின்றது. அதே நேரம் ஆணின் சமூக ஆதிக்கம் கட்டியமைக்கவும் படுகின்றது. இதற்கு எதிரான பரந்துபட்ட மக்களின் உண்மையான சுயநிர்ணயக் குடும்ப ஒப்பந்தங்கள், பாசங்கள் மறைக்கப்படுகின்றன அல்லது அதைப் பழைய ஆணாதிக்க ஒருதாரக் குடும்ப வடிவத்துக்குள் வைப்பதும் அல்லது சேறடிப்பதும் நிகழ்கின்றது.


இந்தக் கயமைத்தனத்தைப் பல மேற்கத்திய மற்றும் கீழைத்தேசப் பெண்ணியம் பேசும் மார்க்சியம் அல்லாத குழுக்களின் சலுகைகளுக்குப் பின்னாலும், ஆணாதிக்கமயமாதலின் பின்னாலும் நிகழ்வது எதார்த்தமாகியுள்ளது. இந்தவகையில் மார்க்சியம் பெண்ணின் உரிமையை ஆணாதிக்கமயமாதல் அல்லாத வழியில் இன்று வழிகாட்டும் பணியைத் துணையின்றி முன்னெடுப்பது அவசியமாகி உள்ளது.