05_2006.jpg

எப்படியாவது ஓட்டு வாங்கி, தேர்தல்களில் வெற்றி பெற்று பதவியைப் பிடிக்க வேண்டும்; அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் அரசியல் கட்சிக்காரர்கள். வாக்காளர்களின் கால்களைப் பிடித்தும் கெஞ்சுவார்கள்  அப்படியும் செய்திருக்கிறார்கள்! ஆனால், ஒன்றை மட்டும் செய்யவே மாட்டார்கள்!

 

            தேர்தல்களின்போது அள்ளி வீசும் வாக்குறுதிகளை, குறைந்தபட்சம் அரசியல் கட்சிகள் தமது தேர்தல் அறிக்கையில் எழுத்துபூர்வமாகத் தரும் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் தண்டிக்கப்படுவார்கள்; அவர்களின் அரசியல் கட்சிகள் தடை செய்யப்படும்; குறைந்தபட்சம் அவர்களின் அங்கீகாரம் இரத்து செய்யப்படும் என்று சட்டம் கொண்டு வருவோம் என்று வாக்குறுதி  வாக்குறுதிதான் தருவார்களா? மாட்டார்கள்!

            ஏனென்றால், ஓட்டுக் கட்சிகள் எல்லாவற்றுக்குமே நன்றாகவே தெரியும்  எல்லாம் ஒரு ஏமாற்று என்பது! அவர்கள் ""அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா'' என்று சொல்லும்போது போலி வாக்குறுதிகளும் அதில் அடங்கும். அவர்கள் ஓட்டுப் பொறுக்குவதற்காக எதையும் செய்வார்கள், சொல்வார்கள்.  செய்யாவிட்டால், யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்றும் தெரியும். வாக்காளர்களையும் இதற்குப் பழக்கப்படுத்தி விட்டார்கள்.

            ஜனநாயக அமைப்பு முறையைப் பலப்படுத்துவது என்ற பெயரில் எவ்வளவோ சீர்திருத்தங்கள் முன்மொழியப் படுகின்றன; கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. ஒரு சார்பாக நடந்துவிடக் கூடாது என்பதற்காகக் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டதைப் போலக் கண்காணித்து உத்தரவுகள் போடுகிறது, தேர்தல் ஆணையம்; புகார் மனுக்கள் குவிகின்றன, விசாரணைகள் ""தூள்'' பறக்கின்றன. வாக்காளர் பதிவுகள்  சரிபார்த்தல்கள் திரும்பத் திரும்ப நடக்கின்றன; போலி வாக்காளர்களைத் தடுப்பதற்குப் புகைப்பட அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன; அதையும் மீறுவதால் புகைப்பட வாக்காளர் பட்டியல்கள் தயாரிக்கப்படுகின்றன. வேட்பாளர் செலவுகளையும், வாக்குப்பதிவையும் கண்காணிப்பதற்கு மேற்பார்வையாளர்கள் போடப்படுகிறார்கள். கள்ள ஓட்டுக்களைத் தடுப்பதற்காக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வந்துவிட்டன. வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுவது, கள்ள ஓட்டுப் போடுவது, ஓட்டு எண்ணிக்கையின்போது நடக்கும் அராஜகம் எல்லாவற்றையும் கண்காணிக்க ""டிஜிட்டல் காமிரா'' மூலம் படப்பிடிப்பும் வந்துவிட்டது. கட்சித்தாவல் தடைச் சட்டம், கட்டாய உட்கட்சித் தேர்தல்கள் கூட வந்துவிட்டன.

            இவை எந்தளவு ஜனநாயக அமைப்பு முறையைப் பலப்படுத்தியுள்ளன என்பது ஒருபக்கம் இருக்கட்டும். ஆனால், பெயருக்குக் கூட ஒரு விசயம் வலியுறுத்தப்படுவதில்லை. அதுதான் ""தேர்தல் வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும்; தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் இந்த இந்த சட்டதிட்டங்களைத்தான் அமலாக்குவோம் என்று முன்கூட்டியே தத்தமது தேர்தல் அறிக்கையில் அறிவித்து விடவேண்டும். அவற்றை மீறினால் தண்டிக்கப்படுவார்கள், அரசியல் கட்சிகள் தடை செய்யப்படும், அங்கீகாரம் இரத்து செய்யப்படும்'' என்பதற்கு மட்டும் சட்டமோ சீர்திருத்தமோ வாக்குறுதியோ இல்லை.

            ""சீட்டுக் கம்பெனி'' நடத்துபவர்கள், பணம் வசூலித்துக் கொண்டு வாக்களித்தபடி பணமோ, பரிசோ தராமல் மோசடி செய்துவிட்டால் அவர்களைத் தண்டிக்க சட்டத்தில் இடமுண்டு. கம்பெனிகளுக்கிடையிலான ஒப்பந்தங்கள் மீறப்பட்டால் ஒப்பந்த மீறல், நம்பிக்கைத் துரோகம் என்று கூறி வழக்குப் போடமுடியும். இன்சூரன்சு  காப்பீட்டுக் கழகங்கள் வாக்களித்தபடி தொகை தராமல் போக முடியுமா? அதேபோல வாக்குறுதிகள் கொடுத்து ஓட்டுக்களை அள்ளிக் கொண்டு போய், அவற்றை நிறைவேற்றாமல் மோசடி செய்வது நம்பிக்கைத் துரோகம், ஒப்பந்த மீறல் குற்றம் என்று கருதப்படுவதில்லையே, ஏன்?

 

            இதைவிட மிகப் பெரிய கிரிமினல் குற்றங்கள் புரிவதற்கு இந்த அரசியல் அமைப்பு முறை ஓட்டுப் பொறுக்கிகளுக்குச் சாதகமாக இருக்கிறது. ஒருமுறை ஓட்டுக்களை வாங்கிக் கொண்டு போய் ஆட்சியில் அமர்ந்துவிட்டால், இது இதைத்தான் செய்யவேண்டும் என்று கட்டாயம் இல்லாததைப் போல, நாட்டுக்கும் மக்களுக்கும் எதிராக எது எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று வெற்றுத்தாளில் கையொப்பம் போட்டுக் கொடுப்பதாகத்தான் இருக்கிறது.

            தேர்தல்களின்போது கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அதேசமயம், 2001இல் ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா அரசு ஒரே சமயத்தில் நாலாயிரம் கோடிக்கு மேல் மின்சாரம், பேருந்துக் கட்டணம், வரிச்சுமைகள் போன்றவற்றை ஏற்றியது. மாணவர்களைக் கொள்ளையடிக்கவும், அரசு ஊழியர்கள் உரிமைகளைப் பறிக்கவும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியதை இரத்து செய்யவும், ரேசன் விலையேற்றம், போராடிய அரசு ஊழியர்கள், பேருந்துத் தொழிலாளர்கள், மாணவர்களை ஒடுக்கவும், அரசு ஊழியர்கள், சாலைப் பணியாளர்களை வேலை நீக்கம் செய்யவும், ஆடுகோழி வெட்டத் தடை, மதமாற்றத் தடை, பொடா சட்டம் என்று ஒடுக்குமுறைகளை ஏவி ஒடுக்கவும் செய்தார்.

            மத்தியில் காங்கிரசு கூட்டணி அரசாக இருந்தாலும் பா.ஜ.க. கூட்டணி அரசாக இருந்தாலும் தவறாமல் தனியார்மயம்  தாராளமயம்  உலகமயக் கொள்கைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அரசுத் துறைத் தொழில்கள் உள்நாட்டுவெளிநாட்டு ஏகபோக முதலாளிகளுக்குத் தாரை வார்க்கப்படுகின்றன. நாட்டையும் மக்களையும் பாதிக்கும் வகையில் அந்நியத் தொழில் கழகங்களுக்கு எல்லாத் தொழில்களும் திறந்து விடப்படுகின்றன. நாடாளுமன்றத்துக்குத் தெரியாமலேயே இராணுவ, அணுசக்தி, விவசாய  தொழில் ஒப்பந்தங்கள் போடப்படுகின்றன. இப்படித்தான் செய்வோம் என்று தேர்தல் அறிக்கைகளில் பகிரங்கமாக அறிவிக்காமலேயே வெற்றுத்தாளில் கையெழுத்து வாங்குவதைப் போல வாக்குகளை வாங்கிப் போகிறார்கள்.

            தற்போது தொகுதி நிலவரம்  வெற்றிவாய்ப்புகள் குறித்த மதிப்பீடுகளை எழுதும் ""கிசுகிசு'' பத்திரிக்கைகள் கூடச் சொல்லுகின்றன. ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் உள்ளூரளவில் நிறைவேற்றுவதாக கடந்த தேர்தல்களில் கொடுத்த வாக்குறுதிகளுள் நான்கில் ஒன்றைத்தான் நிறைவேற்றியிருக்கிறார்கள். அதுவும் பெரும்பாலும் தார்ச்சா லைகள் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றன என்பதுதான்! மீதி ""அம்போ'' தான்! 2001 தேர்தல்களில் ஆட்சிக்கு வருவதற்காக ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதிகள் நீர்மேல் எழுத்தாகி விட்டதாக ஜெயலலிதா ஆதரவு ஏடான ""இந்தியா டுடே'' மதிப்பீடு சொல்கிறது.

            தேர்தல் வாக்குறுதிகள் என்பவை வெற்றுக் கோஷங்கள் என்பதை மக்கள் கண்டு கொண்டும், அரசியல் கட்சிகளின் நம்பகத் தன்மை பறிபோயும் ஆண்டுகள் பலவாகி விட்டன. அரிசியே அரசியலாவதும், சாதியை வைத்து ஓட்டுப் பொறுக்குவதும் கூட தமிழக மக்களுக்குப் புதிதல்ல. இந்தத் தேர்தலில் முதன்முறையாக ஓட்டுப் போடப்போகும் இளைஞர்கள் தங்கள் பெற்றோரைக் கேட்டுப் பார்த்தால் அவர்கள் சொல்வார்கள். அவர்கள் முதன்முறையாக ஓட்டுப் போட்டபோதே தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்காற்றியது அரசியல் அல்ல; ""அரிசியியல்தான்.'' அதற்கு முன்பு வரை சாதியமும் பண்ணை அரசியலும்தான் ஆதிக்கம் வகித்து வந்தன. தேசியத் தலைவர் என்று பொய்யுரைத்துப் புகழப்படும் ""பெருந்தலைவர்'' காமராசரே, தன் பெயரை ""கு.காமராஜ் நாடார்'' என்று சொல்லித்தான் ஓட்டுக் கேட்டார். திராவிடப் பேரறிஞர் என்று கழகங்கள் பெருமை பாராட்டும் அண்ணாவே ""சி.என். அண்ணாதுரை முதலியார்'' என்ற பெயரில்தான் 1957இல் காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்டார்.

            வாரம் ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கும்படி உபதேசித்த காங்கிரசு அரசு, ரேசனில் தலைக்கு ஒரு ""அவுன்சு'' (தலைக்கு நூறு மில்லி அளவு) அரிசி போட்டது. அந்தச் சமயத்தில் அரிசியியலின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்ட அண்ணா தலைமையிலான ""ஒரிஜினல்'' தி.மு.க, ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி தரப்போவதாகவும்  கடல்பாசியிலிருந்து அல்வா தயாரித்துத் தரப்போவதாகவும் தேர்தல் வாக்குறுதி கொடுத்தது. ரூபாய்க்கு மூன்று படி அரிசி போடாவிட்டால் முச்சந்தியில் நிறுத்தி வைத்துச் சவுக்கால் அடியுங்கள் என்று வீராவேசம் பேசினார் ""பேரறிஞர்''. பிறகு அவரே சுருதியை இறக்கிக் கொண்டு, ""மூன்றுபடி இலட்சியம்; ஒருபடி நிச்சயம்'' என்று அடுக்குமொழியில் வசனம் பேசினார்.

            அதையும் நம்பி 1967 தேர்தல்களில் தி.மு.க.வை வெற்றிபெறச் செய்து, ""அண்ணா''வை முதலமைச்சராக்கினார்கள் தமிழக வாக்காளர்கள் (""இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி'' என்று வாக்குறுதி கொடுத்து ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்த என்.டி. இராமராவுக்கு ""அண்ணா'' என்று பட்டப் பெயர் உண்டு) பதவியேற்ற அண்ணா வாக்குறுதியை மறந்துவிடவே, எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய பிறகு சென்னையிலும், கோவையிலும் மட்டும் ""படியரிசித் திட்டம்'' அமுலாக்கப்பட்டது. சில மாதங்களுக்குப் பிறகு நிதிப் பற்றாக்குறையைக் காரணங்காட்டி அத்திட்டமும் கைவிடப்பட்டது.

            இன்று அண்ணாவின் அரசியல் வாரிசு என்று உரிமை பாராட்டும் கருணாநிதியும், அண்ணாவைக் கொடியில் பொறித்துக் கொண்டு அண்ணா பெயரில் கட்சி நடத்தி வரும் ஜெயலலிதாவும் போட்டிப் போட்டுக் கொண்டு அரிசியியல் நடத்துகிறார்கள். விவசாயிகள் எலிக்கறியையும், நெசவாளிகள் கஞ்சித் தொட்டியையும் தேடிப் போகும் இன்றைய நிலையில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு ஒரே வழி   சுனாமி நிவாரணம், வெள்ள நிவாரணம், மகளிர் சுயஉதவிக் குழு, இலவச சைக்கிள், விவசாயிகள் நலத்திட்டம் என்றெல்லாம் ஆயிரம், ஐந்நூறு ரூபாய் நோட்டுக்களை விசிறியடிக்கும் ஜெயலலிதாவை முறியடிப்பதற்கான ஒரே வழி  அரசியல் அல்ல, அரிசியியல்தான் என்று முடிவு செய்த கருணாநிதி, இலவச கலர் டி.வி. பெட்டி, இலவச எரிவாயு அடுப்பு, ஏழைப் பெண்களின் திருமணச் செலவுக்கும், பிரசவத்துக்கு முன்னும் பின்னும் ஆயிரக்கணக்கில் நிதி உதவி, விவசாயிகளுக்குக் கடன் ரத்து, விவசாயிகளுக்கும் விசைத்தறி முதலாளிகளுக்கும் இலவச மின்சாரம், வேலையற்ற இளைஞர்களுக்கு மாத ஊதியம் ஆகியவற்றோடு, அவற்றைவிட முக்கியமாக, இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ தரமான அரிசி வழங்கும் திட்டத்தைத் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தார். இதைப்பார்த்த நடிகர் விஜயகாந்த் மாதம் இருபது கிலோ இலவச அரிசி என்று அறிவித்தார்.

            இந்த அறிவிப்புகளுக்கு முன்பு வரை, ஜெயலலிதா அளித்த ரொக்கம்  இலவசங்கள் ஆகியவையே தேர்தல் பிரச்சாரங்களில் முக்கியப் பேச்சாக இருந்தன. கருணாநிதியின் இலவச அறிவிப்புகளுக்குப் பிறகு தேர்தல் பேச்சே மாறிப் போய்விட்டது. இதெல்லாம் சாத்தியமே இல்லை என்ற ஜெயலலிதா அணி அதிர்ச்சியுற்று, தானும் மாதம் பத்து கிலோ அரிசி இலவசமாகத் தரும் வாக்குறுதியை அறிவித்தார். யாருடைய அறிவிப்பு மேலானது, நம்பத்தகுந்தது என்ற இலாவணிதான் இப்போது முக்கியமாகிவிட்டது.

            மூன்று வருடங்களுக்கு முன்புதான் ""கஜானா காலி'' என்று அறிவித்து பல ஆயிரங்கோடி வரிகட்டணச் சுமைகளை ஏற்றிய ஜெயலலிதா, இதுவரை அமலாக்கிய நிவாரண  இலவசத் திட்டங்களுக்கே நிதியளித்தது மத்திய அரசுதான் என்று தி.மு.க. அணி உரிமை பாராட்டிக் கொள்கிறது; நேற்றுவரை கருணாநிதியின் அரிசிஇலவசத் திட்டங்களைக் கேலி செய்த ஜெயலலிதாதானே அரிசி  இலவச அறிவிப்புகள் தருவது மோசடிதான் என்கிறது தி.மு.க. அரிசி உட்பட மக்களின் அடிப்படை தேவைகளுக்கான, விவசாயம் நெசவு போன்ற தொழில்களுக்கான, மருத்துவம்  கல்வி, சுகாதாரம் போன்றவற்றுக்கான மானியங்களைக் கடுமையாக வெட்டும் மத்திய காங்கிரசு அரசோடு சேர்ந்துள்ள கருணாநிதி பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு பிடிக்கும் இலவசத் திட்டங்களை அறிவித்திருப்பதும் மோசடிதான் என்கிறது, ஜெயா  வைகோ  திருமா அணி.

            கருணாநிதியோ, ஜெயலலிதாவோ, விஜயகாந்தோ அறிவித்துள்ள இலவச வாக்குறுதிகள் தேர்தல்கால பித்தலாட்டங்கள்தாம் என்பதில் சந்தேகமில்லை. இவர்களில் யார் ஆட்சிக்கு வந்தாலும், சில இலவசத் திட்டங்கள், சில காலம் மட்டுமே அமலுக்கு வரும். அவையும் ஏதாவது காரணங்காட்டி கிடப்பில் போடப்படும் என்பதில் சந்தேகமில்லை. ""சந்தர்ப்பவாத தேர்தல் கூட்டுகள்'', ""அரசியலில் நிரந்தரப் பகையும் கிடையாது, நட்பும் கிடையாது'' என்பவைபோல, ஓட்டுப் பொறுக்குவதற்காக எதையும் பேசலாம், செய்யலாம் என்பதும் வழக்கமாகிவிட்டது; தேர்தல் கால வாக்குறுதிகளை ""சீரியசாக'' எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதும் விதியாகி விட்டது. ""சினிமாக் கதையில் தர்க்கம் பார்க்கக் கூடாது; எல்லாம் ஒரு பொழுதுபோக்கு, என்று பேசப்படுவதைப் போல தேர்தல் வெறும் கேலிக் கூத்தாக்கப்படுகிறது.

            ஆனாலும், "சோ', ரஜினி, ஞாநி போன்ற தேசியவாதிகள்  அறிவாளிகள் மட்டும் இத்தகைய இலவச அரசியல் என்பதே திராவிடக் கட்சிகளின் கவர்ச்சி அரசியலால் வந்தது என்றும், நீண்டகால தொழில் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் என்ற சிந்தனையற்ற கீழ்த்தரமான, சுயநல அரசியல்வாதிகளால் வந்தது என்றும் உபதேசிக்கிறார்கள். தமிழகத்தில் "அவுன்சு' அரிசித் திட்டம் ""பெருந்தலைவர்  தியாகச் செம்மல்'' ஆட்சிக் காலத்தில் தான் வந்தது. நிரந்தரமான பஞ்சபூமியான ஒரிசா, பீகார், மத்தியப்பிரதேசத்தில் மட்டுமல்ல, வேகமான தொழில் வளர்ச்சி காணும் ஆந்திரா, கர்நாடகாவிலும், தமிழகத்தை விட மிகவும் முன்னேறிய மராட்டியத்திலும் கூட தேசியக் கட்சிகளின் ஆட்சிக் காலத்திலேதான் பட்டினிச் சாவுகளும், விவசாயிகள் தற்கொலைகளும் நடக்கின்றன.

            எல்லாம் எதனால்? 1947க்குப் பிறகு நிலவுடைமை பண்ணை ஆதிக்கம், தரகு முதலாளிகள்  ஏகாதிபத்திய கொள்ளை நீடித்தது; கடந்த 15 ஆண்டுகளாக தனியார்மயம்  தாராளமயம்  உலகமயம், பொருளாதார சீர்திருத்தம், நவீனமயம் என்ற பெயரால் உலகவங்கி, உலக வர்த்தகக் கழகம்  பன்னாட்டு தொழில் கழகங்கள் திணிக்கும் வளர்ச்சித் திட்டங்கள் அமலில் உள்ளன. புதிய பொருளாதாரக் கொள்கை  சீர்திருத்தங்களின் பலன்கள் கசிந்து அடித்தட்டு மக்களின் வாழ்வை மேம்படுத்திவிடும் என்ற வாக்குறுதி பொய்த்துப் போனது. வறுமையும், பட்டினிச் சாவும், தற்கொலையுமே மிஞ்சியது. உழைக்கும் மக்கள் அடியோடு மாண்டு போனால் மலிவான உழைப்புக்கு பன்னாட்டு முதலாளிகள் எங்கே போவது? அல்லது அவர்கள் பொங்கி எழுந்தால் பன்னாட்டு முதலாளிகள் சுரண்டலும் ஆதிக்கமும் என்ன ஆவது? இலவசங்கள் மூலம் உழைக்கும் மக்களை மயக்கி வைப்பதுதான் அவர்களின் நலனுக்கு உகந்தது. அதைத்தான் மு.க.வும், ஜெயாவும், கேப்டனும் செய்கிறார்கள்.

மு ஆர்.கே.